×

கொலை செய்து விடுவதாக மிரட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய காமகொடூரனுக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

செங்கல்பட்டு: கொலை செய்து விடுவதாக மிரட்டி, சிறுமியை கர்ப்பமாக்கிய காமகொடூரனுக்கு 20 ஆ்ணடுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஒழுகரை கிராமம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (58). இவர் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை, நோட்டமிட்டு, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும், அந்த சிறுமியிடம், ‘‘இதுபற்றி யாரிடமும் சொல்ல கூடாது.

மீறி சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன்,‘‘ என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், பயந்துபோன அச்சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி வெளியே சொல்லாமல் இருந்தாள்.இதனை அடுத்து குணசேகரன் பாதிக்கப்பட்ட சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத பொழுது அடிக்கடி மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார். இதன் மூலமாக பாதிக்கப்பட்ட அச்சிறுமி கர்ப்பமானாள். இந்நிலையில், அவள் தான் கர்ப்பம் அடைந்ததை பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி தமிழரசி முன்பு நடைபெற்று வந்தது. இதனிடையே, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அச்சிறுமி பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணை நிறைவு பெற்றது. அதில் குணசேகரன் மீது சுமத்தபட்ட குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.57 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே ரூ.7.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கொலை செய்து விடுவதாக மிரட்டி சிறுமியை கர்ப்பமாக்கிய காமகொடூரனுக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kamakoduran ,POCSO court ,Chengalpattu ,Kamakhoduran ,
× RELATED காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று...